நடப்பு 2019-20 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவிகிதமாக இருக்கும் என சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப் கணித்துள்ளது.
உலக பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை ஐ.எம்.எஃப் வெளியிட்டுள்ளது. அதில் உலக பொருளாதார வளர்ச்சியை 3.2 சதவிகிதத்தில் இருந்து 3 சதவிகிதமாக குறைத்து என்றும், அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போரால் உலக பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளதாகவும் ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.
அதே போல் நடப்பு 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் நடப்பாண்டில் 6.1 சதவிகிதமாக இருக்கும் என்றும், 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இதுவே கடந்த ஜூலை மாதத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு 2019-20 நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் என்றும், 2020-21 நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என ஐ.எம்.எஃப் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2019 - 20 நிதி ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 0.9 சதவிகிதம் குறைத்து கணிப்பை மாற்றிக் கொண்டுள்ள ஐ.எம்.எஃப், இந்தியாவின் உள்நாட்டு தேவை குறைந்துள்ளதால், பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளதாக தெரிவிக்கிறது. மேலும், இந்தியாவின் கிராம புற நுகர்வை அதிகரிக்க உதவியாக இருக்கும் பல திட்டங்கள் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், பொருளாதார ரீதியான சிக்கல்களைச் சரி செய்ய, வட்டி விகிதங்களை குறைப்பது மற்றும் அடிப்படைக் கொள்கைகளில் சீர் திருத்தங்களைக் (Structural Reform) கொண்டு வருவது போன்றவைகளைச் செய்ய வேண்டும் என்று ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.